ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் பலமுறை விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக தரையில்தான் பந்து பட்டதால் கேட்ச் அவுட் கொடுக்காத நடுவரை என்னமோ அநீதி இழைத்து விட்டதாக கலாய்த்தார். அதற்காக அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடனை மறைமுகமாக டுவிட்டரில் ஏளனமாக கலாய்த்தார்.

Advertisement

அதுபோன்ற சேட்டைகளை செய்த இவர் பேட்டிங்கில் படு மோசமாக செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் 4 வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வரும் இவர் இதுவரை 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளதால் எப்போதும் வாயில் பேசாமல் செயலில் வெற்றி பெற்று காட்டுமாறு அவர் மீது ரசிகர்கள் கோபத்துடன் காணப்படுகின்றனர்.

அத்துடன் இந்த வருடம் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 2 வருடங்கள் கழித்து ராஜஸ்தானுக்காக அரைசதம் அடித்த அவர் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட 18 ரன்களை விளாசினார். அதனால் கடுப்பான ஹர்ஷல் படேல் அந்த இன்னிங்ஸ் முடிந்த இடைவெளியில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் அந்தப் போட்டியில் பெங்களூரு தோல்வியடைந்த பின் இரு அணி வீரர்களும் கைகொடுக்கும் போது ஹர்ஷல் படேலிடம் ரியன் பராக் கை கொடுத்தார்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஹர்ஷல் படேல் பகையை மறக்காமல் கோபத்துடன் கை கொடுக்க மறுத்துவிட்டார். அந்த நிகழ்வு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒரு இளம் வீரராக பகையை மறந்து ரியன் பரக் கை கொடுக்க வந்தபோது ஹர்ஷல் படேல் அவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் ஒரு போட்டியில் தன்னிடம் ஹர்ஷல் படேல் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக பழி தீர்ப்பதற்காக அவர் செய்ததை இந்த வருடன் திருப்பி செய்ததாக தெரிவிக்கும் ரியான் அதன் காரணமாகவே அந்த சண்டை ஏற்பட்டதாக மௌனம் கலைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த வருடம் பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் ஹர்ஷல் படேல் என்னை அவுட் செய்தார். அப்போது பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்த என்னை வாய் மேல் கை வைத்து ஆக்ரோசமாக அனுப்பி வைத்தார். அந்த தருணத்தில் அதை நான் கவனிக்கவில்லை. ஆனால் ஹோட்டல் சென்றபின் டிவியில் பார்த்தேன். அன்று முதல் அது எனது மனதில் நின்றது.

தற்போது (ஐபிஎல் 2022 தொடரில்) கடைசி ஓவரில் நான் அவரை அடித்த போது அவர் எனக்கு செய்ததை திருப்பி செய்தேன். நான் எதுவும் பேசவில்லை. திட்டவும் இல்லை ஆனால் சிராஜ் என்னை அழைத்தார். ஹர்ஷல் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார். 

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை அவுட் செய்யும் போது அதை விதவிதமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் 2021 சீசனில் ரியன் பராக்கை அவுட் செய்த போது எதுவும் பேசாமல் வாய் மேல் கைவைத்து ஆக்ரோசமாக அனுப்பி வைத்த ஹர்ஷல் படேல் செய்கையை மறக்காமல் இந்த வருடம் திருப்பி செய்து பழி தீர்த்ததாக ரியான் பராக் தெரிவிக்கிறார்.

மேலும் அதற்காக மற்றொரு பெங்களூரு வீரர் முகமது சிராஜ் தம்மிடம் குழந்தை போன்ற வயதில் இருக்கும் நீ அதற்கேற்றாற் போல் நடந்து கொள் என்று அறிவுரை வழங்கியதாகவும் ரியன் பராக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசிய அவர், “அப்போட்டி முடிந்தபின் சிராஜ் என்னை அழைத்து “இங்கே வா, நீ ஒரு குழந்தை என்பதால் குழந்தை போல் நடந்து கொள்” என்று கூறினார்.

அதற்கு அவரிடம் நான் “அண்ணா உங்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை” என்று தெரிவித்தேன். அதன்பின் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்ட போது ஹர்ஷல் படேல் என்னிடம் கை கொடுக்காதது அவரின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டியதாக உணர்ந்தேன்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News