SA vs IND: பந்துவீச்சில் கலக்கிய பிரஷித் கிருஷ்ணா; பேட்டிங்கில் அசத்திய பிரதோஷ், ஷர்தூல்!

Updated: Wed, Dec 13 2023 22:36 IST
SA vs IND: பந்துவீச்சில் கலக்கிய பிரஷித் கிருஷ்ணா; பேட்டிங்கில் அசத்திய பிரதோஷ், ஷர்தூல்! (Image Source: Google)

தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. இதில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தென் ஆபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

இந்நிலையில் அத்தொடருக்கு தயாராக தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி பயிற்சி போட்டியில் களமிறங்கியுள்ளது. நேற்று சென்வெஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. குறிப்பாக ரூபின் ஹெர்மன் 95, ஜீன் டு பிளேஸி சதமடித்து 106, கோன்னர் 48 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்கள் குவித்ததால் ஒரு கட்டத்தில் 309/5 என்ற நிலைமையில் தென் ஆப்பிரிக்கா ஏ வலுவாக இருந்தது.

அப்போது 95ஆவது ஓவரை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜீன் டு பிளேஸிஸை அவுட்டாக்கி அடுத்ததாக வந்த ஈத்தன் போஸை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதை தொடர்ந்து தம்முடைய அடுத்த ஓவரின் முதல் பந்தில் மோடிமொக்கேனை டக் அவுட்டாக்கிய அவர் 3 பந்துகளில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் இந்தியா ஏ அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் சாதனையையும் பிரசித் கிருஷ்ணா படைத்துள்ளார்.

அத்துடன் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த 6ஆவது இந்திய பவுலர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் சிஎஸ் நாயுடு (1946), ரங்காச்சாரி (1948), ரமேஷ் டிவேச்சா (1952), இஃர்பான் பதான் (2006), ஜஸ்பிரித் பும்ரா (2019) ஆகிய இந்திய வீரர்களும் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்துள்ளனர்.

அந்த வகையில் 305/5 ரன்களில் இருந்த தென் ஆப்பிரிக்கா ஏ அணியை 319 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளும் சௌரப் குமார் 3 விக்கெட்டுகளும் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா ஏ அணிக்கு சாய் சுதர்சன் 14, தேவ்தூத் படிக்கல் 30, கேப்டன் கேஎஸ் பரத் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் தமிழகத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பிரதோஷ் பால் சதமடித்து 163 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 68 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் களமிறங்கிய சர்தூல் தாக்கூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன்மூலம்  மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்  இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்களைச் சேர்த்து அசத்தினர். இதில் சர்தூல் தாக்கூர் 9 பவுண்டர், ஒரு சிக்சர் என 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய ஏ அணி 58 ரன்கள் முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை