எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Jan 13 2024 11:11 IST
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவின் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்ப்ட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்ல் நகரிலுள்ள போலாண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜேசன் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாட முயற்சித்து தொடக்கம் முதலே தடுமாறினர். அதன்பின் ஜேசன் ராய் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய விஹான் லூப் 11 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டேவிட் மில்லர் - மிட்செல் வான் பியூரன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் பியூரன் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபாபியன் ஆலனும் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த அண்டில் பெஹ்லுக்வாயோ 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கார்பின் போஷ்,  டேரின் டுபாவில்லன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஜிம்மி நீஷம், வில் ஜேக்ஸ், ஈதன் போஷ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஜேக்ஸ் 5 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டி பிருனும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பிலிப் சால்ட் - ரைலீ ரூஸோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலிப் சால்ட் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஜிம்மி நீஷம் 21 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 7விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது. 

பார்ல் ராயல்ஸ் அணி தரப்ப்பில் ஆண்டில் பெஹ்லுக்வாயோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை