எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!

Updated: Sat, Jan 27 2024 21:02 IST
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரைப் பின்பற்றி கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட எஸ்ஏடி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

செயிண்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய் ஜோர்டன் ஹார்மேன் 2 ரன்களுக்கும், டேவிட் மாலன் 18 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாம் அபெல் - கேப்டன் ஐடன் மார்க்ரம் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி டாம் அபெல் அரைசதம் கடந்த நிலையில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 60 ரன்களைச் சேர்த்து கீரென் பொல்லார்ட் பந்துவீச்சி விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் தனது பொறுப்பை உணர அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 29 பந்துகளில் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் நுவான் துஷாரா, காகிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரர்கள் ரஸ்ஸி வேண்டர் டுசென் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய சாம் கரண் 3 பவுண்டரி, ஒரு சிச்கர் என 30 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் கீரன் பொல்லார்ட் ஒருமுனையில் நிற்க, மறுபக்கம் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் 3 சிக்சர்களை விளாசி 26 ரன்களிலும், டெலானோ பொட்ஜீட்டர் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் கடைசி ஓவரில் கேப்டவுன் அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த ஓவரில் ஜார்ஜ் லிண்டே ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

அதேசமயம் மறுமுனையில் 30 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் கீரன் பொல்லார்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை