தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராய்ல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு சாம் ஹைன் மற்றும் லுஹன் ட்ரே பிரிட்டோரியஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாம் ஹைன் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரிட்டோரியஸும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் 5 ரன்னிலும், கீத் டட்ஜியன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ருபின் ஹர்மான் - தினேஷ் கார்த்திக் இணை ஓரளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் 28 ரன்களைச் சேர்த்த கையோடு ருபின் ஹர்மான் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தயான் கலீமும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கிய தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கினார். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் பிஜோர்ன் ஃபோர்டுயினும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதன் காரணமாக பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டோனோவன் ஃபெரீரா மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டெவான் கான்வே 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனோவன் ஃபெரீரா 10 ரன்களில் ஆட்டமிழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியூஸ் டூ ப்ளூய் 18 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் நீடித்து வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News