எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது சன்ரைசர்ஸ்!

Updated: Sat, Jan 25 2025 08:49 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் டேவிட் பெட்டிங்ஹாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பெடிங்ஹாமுடன் இணைந்த டாம் அபெலும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் டாம் அபெல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பெடிங்ஹாமுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இப்போட்டியில் நிதானமாக விளையாடிய டேவிட் பெடிங்ஹாம் 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - மார்கோ ஜான்சென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களையும், மார்கோ ஜான்சென் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் எவான் ஜோன்ஸ் 2 விக்கெட்டுகளையும், லுதோ சிபம்லா மற்றும் ஹர்டுஸ் வில்ஜோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லியுஸ் டூ ப்ளூய் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவான் கான்வே 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், டோனோவன் ஃபெரீரா, எவான் ஜோன்ஸ், ஹார்டுஸ் வில்ஜோன் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை