SA20 League: பட்லர், மில்லர் அதிரடியில் பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. இதில் ஆடம் ரோஸிங்டன், ஜோர்டன் ஹெர்மன் ஆகியோர் தலா 4 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 15, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மட்ஸ் அரைசதம் கடந்தார். பின் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் மார்கோ ஜான்சென் 13, ஜேம்ஸ் ஃபுல்லர் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் அண்டில் பெஹ்லுக்வாயோ, எவான் ஜோன்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜேசன் ராய் 8 ரன்களிலும், விஹான் லூப் 2 ரன்களிலும், வான் புரென் 14, ஆண்டில் பஹ்லுக்வாயோ 4 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
பின் 51 ரன்களில் பட்லரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 4 சிக்சர்களை விளாசியதுடன் 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.