SA20 League: மீண்டும் மிரட்டிய டூ பிளெசிஸ்; சன்ரைசர்ஸுக்கு 161 டார்கெட்!
தென் ஆப்பிரிக்கவின் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
ஜொஹனன்ஸ்பர்க் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடுத்தள் அமைத்தனர். இதில் அபாரமாக விளையாடிய டூ பிளெசிஸ் அரைசதம் கடக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிக் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் 7 ரன்களிலும், ஃபெரீரா 2 ரன்களிலும் எடுத்த நிலையில், ஐடன் மார்க்ரமின் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய டூ ப்ளூயும் 5 ரன்களுக்கும், செப்ஃபெர்ட் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் 61 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 92 ரன்களில் ஆட்டமிழந்து, 8 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் சிசாண்டா மகாலா, ஐடன் மார்க்ரம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கவுள்ளது.