SA20 League 1st SF: ரூஸோவ் அரைசதத்தால் சவாலான இலக்கை நிர்ணயித்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதில் இன்று நடைபெற்றுவரும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
ஜோஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் குசால் மெண்டிஸ் 7 ரன்களுக்கும், தியூனிஸ் டி ப்ரூயின் 9 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்டும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ஒருபக்கம் அதிரடி காட்ட, மறுபக்கம் களமிறங்கிய காலின் இங்ராம், ஜிம்மி நீஷம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடி காட்டிய ரைலீ ரூஸொவ் நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக ஈதன் போஷும் ரன்களைச் சேர்க்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் அரைசதம் கடந்திருந்த ரூஸோவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அதன்பின் அதே ஓவரின் கடைசி பந்தில் ஈதன் போஷ் 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் அண்டில் பெஹ்லுக்வாயோ 3 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.