என் திட்டம் தெளிவாக இருந்தது - ஆவேஷ் கான்!

Updated: Fri, Mar 29 2024 14:21 IST
என் திட்டம் தெளிவாக இருந்தது - ஆவேஷ் கான்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்கின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் 185 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 84 ரன்களை குவித்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், ராஜ்ஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 44 ரன்களைச் சேர்த்து போராடிய நிலையிலும் டெல்லி அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரியான் பராக் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்தநிலையில், ஆடுகளம் ஒரு திசையில் மிக பெரியது என்பதால் நான் அதிகமான வைட் யார்க்கர் தான் வீச வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னிடன் இப்போட்டியின் கடைசி ஓவருக்கான எனது திட்டம் தெளிவாக இருந்தது. ஆடுகளம் ஒரு திசையில் மிக பெரியது என்பதால் நான் அதிகமான வைட் யார்க்கர் தான் வீச வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன்.

ஒவ்வொரு பந்தை வீசுவதற்கு முன்பாகவும் அடுத்த பந்தை எப்படி வீச வேண்டும் என்பதை  சற்று சிந்திப்பதற்காக 5 நொடிகள் எடுத்து கொண்டேன். பேட்ஸ்மேன் சிறப்பான ஷாட் அடித்தால் அது அவருக்கு நல்லது ஆனால் நான் என் மீது முழு நம்பிக்கை வைத்தே பந்துவீசினேன்.  ராஜஸ்தான் அணி நிர்வாகமும், பயிற்சியாளர் சங்ககாராவும் எங்களுக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்து வருகின்றனர், இதன் காரணமாக தோல்வியை நினைத்து பயப்படாமல் எங்களால் சுதந்திரமாக விளையாட முடிகிறது. 

நான் எப்போதும் எனது பந்துவீச்சில் முன்னேற்றை ஏற்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். சஞ்சு சாம்சனும் ஒரு கேப்டனாக எங்களுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறார். இதனால் எங்கள் மீது பெரிதாக அழுத்தம் எதுவும் ஏற்படுவது இல்லை. பந்துவீச்சில் என்னை முன்னேற்றி கொண்டே இருப்பதற்காக வலைபயிற்சியில் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை