சஞ்சு சாம்சன் அடுத்த மகேந்திர சிங் தோனியாக வருவார் - ராஜா மணி!

Updated: Tue, Jun 13 2023 14:48 IST
Sanju Samson Spends 2 Crores Out Of 15 Crore Salary To Help Young And Talented Cricketers (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக சில ஆண்டுகளுக்கு மேலாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டில் இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் அவருக்கான இடம் இல்லை என்பதால், கடந்த ஆண்டும் அவருக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆரம்பித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்குப் பின்பு எதிர்பாராத விதமாக சரிந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிட்னஸ் பயிற்சியாளராக இருக்கும் ராஜாமணி சஞ்சு சாம்சன் குறித்து சில முக்கியமான தகவல்களைத் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த விஷயத்தை நான் வெளியில் சொல்வதால் சஞ்சு சாம்சன் கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன். வருடம் 15 கோடி ரூபாய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சம்பளம் வாங்கும் அவர், அந்த அணியின் இளம் வீரர்கள் உருவாக்கத்திற்காக ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாயை செலவு செய்கிறார்.

அதேபோல் அவருக்கு என்னென்ன வசதிகள் அமைத்துக் கொள்கிறாரோ அவரைச் சுற்றி உள்ள அனைவருக்கும் அதே வசதிகளைத்தான் செய்து தருவார். பணத்தைப் பற்றி அவர் எந்தக் கவலையும் பட மாட்டார். ஒரு பெரிய ஹோட்டலில் அணியினர் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்கப் போகும் பொழுதுதான் தெரியும், அதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் பணத்தை கொடுத்திருக்கிறார் என்று.

அவர் தனது ஆட்டத்தை மெருகேற்ற அதிகப்படியாக உழைக்கிறார். இதற்கான அவரின் உழைப்பு வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. நிச்சயமாக அவர் அடுத்த மகேந்திர சிங் தோனியாக வருவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை