ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!

Updated: Sun, Mar 24 2024 22:24 IST
ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களையும், துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 ரன்களையும் சேர்த்த நிலையிலும் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “எப்போதும் களத்தில் நேரத்தை செலவிடுவது வேடிக்கையாக இருக்கும். அதில் வெற்றி பெறுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும். எங்களிடம் சற்று வித்தியாசமான பிளேயிங் லெவனை அமைக்க வாய்ப்பு இருப்பதால் இம்முறை எனக்கு வேறு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரா என சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.  கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் எனக்கு சில அனுபவங்கள் கிடைத்துள்ளது. தற்போது சூழ்நிலைகளை புரிந்து கொள்ள நான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதும் எனக்கு உதவியது. இவை அனைத்தும் உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை புரிந்துகொள்ள உதவும். 

 

நான் எப்போதும் பந்தை பார்த்து ரியாக்சன் கொடுக்கும் பேட்ஸ்மேன். அது முதல் பந்தாக இருந்தாலும் சரி கடைசி பந்தாக இருந்தாலும் சரி அதுகுறித்து நான் கவலைப்பட்டதில்லை. மேலும் இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர் இன்றைய போட்டியில் மூன்று ஓவரை வீசவில்லை எனில் எனக்கு இந்த விருது கிடைத்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை