இந்த வீரருக்கு 15 கோடி கொடுத்திருக்க வேண்டும் - சேவாக்!

Updated: Fri, May 27 2022 14:14 IST
Sehwag names RCB star who should be in Rs 14-15 cr category (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறவுள்ள எலிமினேஷன் 2 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும்.

ராஜஸ்தான் அணி, குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. ஆர்சிபி அணி எலிமினேஷன் 1 ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை அசால்ட்டாக வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்றால், இரண்டு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி முழுக்க முழுக்க பட்லரை நம்பியிருப்பதுபோல் ஆர்சிபி கிடையாது. அந்த அணியில் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், தினேஷ் கார்த்திக், ராஜத் படிதர் போன்ற பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். கடந்த போட்டியில் கூட டூ பிளெசிஸ், கோலி ஆகியோர் சொதப்பிய நிலையில் படிதர் அபாரமாக விளையாடி சதம் விளாசி மேட்ச் வின்னராக இருந்தார். மேலும் ஹர்ஷல் படேலும் தனது பங்கிற்கு சிறப்பாக பந்துவீசி 25/1 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், ஆர்சிபி பௌலருக்கு அதிக தொகை கொடுத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதில், “குஜராத் அணிக்கு மேட்ச் வின்னராக இருக்கும் ராகுல் திவேத்தியாவை 10 கோடிக்கு ஏலம் எடுத்தது சரிதான் என நாம் பேசி வருகிறோம். ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலையும் 10.75 கோடிக்கு வாங்கியது சரி என பலர் பேசுகிறார்கள். ஆனால், அது ஏற்புடையது அல்ல. அவர் 14-15 கோடிக்கு ஏலம் போக தகுதியானவர்தான். அவருக்கு அந்த தொகைதான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

டெத் ஓவர்களில் பந்துவீசி, பலமுறை மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். இது சாதாரண விஷயம் கிடையாது. தற்போது குவாலிஃபையர் 2 ஆட்டம் வரை ஆர்சிபியை கூட்டி வந்திருக்கிறார். ஆர்சிபி இவருக்கு போனஸாவது கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை