ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நாளை ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. விரைவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இத்தொடரில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடமும் காணப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அஃப்ரிடி இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

ஏனெனில் பொதுவாகவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக புதிய பந்தை ஸ்விங் செய்து இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய சவாலை கொடுப்பார்கள். மறுபுறம் 2017 சாம்பியன்ஸ் கோப்பை ஃபைனல் முதல் 2019 உலகக்கோப்பை அரையிறுதி வரை முக்கியமான போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோஹித் சர்மா, ராகுல் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டுள்ளார்கள். சொல்லப்போனால் 2021 டி20 உலகக் கோப்பையில் ரோஹித், ராகுல் ஆகியோரை பவர் பிளே ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த ஷாஹின் அஃப்ரிடி, இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

Advertisement

அந்த நிலையில் தற்போதைய அணியில் ரோஹித், கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் 4 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். எனவே முதல் 10 ஓவர்களில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று சந்தேகமின்றி நம்பலாம். அதன் காரணமாக பவர் பிளே ஓவர்களில் அவருக்கு எதிராக தாக்குப் பிடித்தால் மட்டுமே இந்தியா வெல்ல முடியும் என்ற நிலைமை இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் புதிய பந்தை பயன்படுத்தி பவர் பிளே ஓவர்களில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக காலி செய்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கொண்டு வர வைப்பதே தம்முடைய திட்டம் என ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார். அதாவது ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விட புதிய பந்தை எதிர்கொள்வதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக சிரமப்பட்டு எளிதாக அவுட்டாகி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னுடைய போட்டியின் திட்டம் மிகவும் எளிதானது. அதை அனைத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் அறிவார்கள். என்னுடைய இலக்கு என்னவெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்கி எதிரணியின் மிடில் ஆர்டர் மீது அதிகப்படியான அழுத்தத்தை போட வேண்டும். ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை போல் அல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்போதுமே புதிய பந்துக்கு எதிராக சிறப்பாக விளையாட தடுமாறுவார்கள். எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புதிய பந்தை எதிர்கொள்வதற்கு அதிக அழுத்தத்தை சந்திக்கும் நிலையை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News