ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யும் லக்னோ?
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதில் அவர் 505 ரன்களையும், 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தி இருந்தார்.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் மாற்று வீரராக நிச்சயம் இடம்பிடிப்பார் என்ற பேச்சுகளும் அடிப்பட்டன. அதற்கேற்ற வகையில் ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேற்கொண்டு எல்.எஸ்.ஜி முகாமில் ஜெர்சி அணிந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவரது பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதனால் அப்போதே அவர் லாக்னோ அணியில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதனை உண்மையாக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாட இருந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு மாற்றாக ஷர்தூல் தாக்கூரை அந்த அணி ஒப்பந்த செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பந்துவீச்சாளர்கள் மயங்க் யாதவ், ஆவேஷ் கான், மெஹ்சின் கான் உள்ளிட்டோரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதில் மயங்க் யாதவ் முதல் பாதில் ஐபிஎல் தொடரை தவறவிடுவார் என்றும் பிற வீரர்களின் உடற்தகுதி குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது மொஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூர் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் தொடரில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 307 ரன்களையும், பந்துவீச்சில் 94 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆனாலும் கடந்த சீசனில் அவர் விளையாடிய 9 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.