50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்துள்ளோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 32 ரன்களையும், விராட் கோலி 31 ரன்களையும் சேர்க்க, அணியின் கேப்டன் ரஜத் படிதர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது.
சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ரஜத் படிதர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “உண்மையைச் சொல்லப் போனால், இந்த விக்கெட்டில் 170 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்காக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் கூடுதலாக 20 ரன்களைக் கொடுத்துவிட்டோம். மேற்கொண்டு இது விக்கெட் பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. கூடுதலாக 20 ரன்களை சேர்த்து சேஸ் செய்யும்போது எங்களின் அணுகுமுறையை நாங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ராகுல் திரிபாதி மற்றும் நானும் எங்களுடைய வழக்கமான ஷாட்டை தான் விளையாடினோம். ஆனால் அது இன்றைய தினம் சரியானதாக இல்லை. அதேசமயம் இன்றைய தினம் எங்கள் அணியின் ஃபீல்டிங் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் கேட்ச்சுகளை விட்டோம். அதன் காரணமாக இந்த போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வந்து கொண்டிருந்தன.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடையவில்லை, வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியைத் தழுவிவுள்ளோம். எங்களுடைய அடுத்த போட்டியை நாங்கள் கௌகாத்தியில் விளையாட இருக்கிறோம். அதற்காக நாங்கள் மனதளவில் திரும்ப வேண்டும். ஐபிஎல் போன்ற தொடரில் நமக்கு மோசமான நாள் இருக்கும், ஆனால் அதிலிருந்து நாம் வலுவாக திரும்ப வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.