SL vs BAN, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Updated: Tue, Jul 08 2025 22:42 IST
Image Source: Google

SL vs BAN, 3rd ODI: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 08) நடைபெற்றது. பல்லகலேவில் உள்ள பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், பதும் நிஷங்கா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து குசால் மெண்டிஸுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்காவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

இதில் குசால் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், சரித் அசலங்காவும் அரைசதம் கடந்தார். அதன்பின் 58 ரன்களுடன் சரித் அசலங்கா ஆட்டமிழந்த நிலையில், 18 பவுண்டரிகளுடன் 124 ரன்களைச் சேர்த்த கையோடு குசால் மெண்டிஸும் விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் எமனும் 28 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Also Read: LIVE Cricket Score

இதில் மெஹிதி ஹசன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 28 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய தாவ்ஹித் ஹிரிடோயும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜாக்கர் அலி 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. 

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை