SL vs BAN, 3rd T20I: இலங்கையை 132 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
SL vs BAN, 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருந்தன. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கும் பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் குசால் மெண்டிஸ் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், தினேஷ் சண்டிமால் 4 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்கா 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். மேற்கொண்டு கமிந்து மெண்டிஸும் ஒரு பவுண்டரி, ஒரு சிஸர் என 21 ரன்களில் நடையைக் கட்டினார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்காவும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெஃப்ரி வண்டர்சேவும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 4 பவுண்டரி, 2 சிஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.