வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
Najmul Hossain Shanto: டெஸ்ட் வடிவத்தில் இனி நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என வங்கதேச அணியின் நஜ்முல் ஹொசைன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொழுபுவில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணியானது இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்துயது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியிலும், முந்தைய போட்டியிலும் சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியுடன் வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகுவதாக அறிவித்துள்ளார். இப்போட்டி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச அணியின் கேப்டன் "இதற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை, அணியின் முன்னேற்றத்திற்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது அணிக்கு உதவும் என்று நினைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வங்கதேச அணியின் ஒரு பகுதியாக இருக்கிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக இருப்பது புத்திசாலித்தனம் என்று நான் நினைக்கவில்லை. வாரியம் இதைப் பற்றி என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் முடிவை நான் ஆதரிப்பேன். ஆனால் இது எனது தனிப்பட்ட முடிவு. மூன்று வெவ்வேறு கேப்டன்களுடன் பணியாற்றுவது அணிக்கு கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இதனை உணர்ச்சிவசப்பட்டு எடுத்ததாக யரும் எண்ண வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வங்கதேச அணியின் மூன்று வடிவிலான அணிக்கும் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ செயல்பட்டு வந்த நிலையில், டி20 அணியின் கேப்டனாக லிட்டன் தாஸும், ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை டெஸ்ட் தொடருக்காக வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ செயல்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
2023 நவம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் வங்கதேச அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சாண்டோ, 14 டெஸ்ட் போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார். இதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரது தலைமையில் வங்கதேச அணி எஞ்சிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியை டிராவிலும் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.