தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் சிறப்பாக விளையாடி 121 ரன்களைச் சேர்த்தார். அவருட்ண் இணைந்து விளையாடிய ஹென்ரிக்ஸ் 51 ரன்னும், கிளாசென் 43 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் சமீரா, கருணரத்னே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்,
மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி 41 ஓவரில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 36.4 ஓவரில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சரித் அசலங்கா ஓரளவு தாக்குப் பிடித்து 77 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 36 ரன்னும், தசுன் சானகா 30 ரன்னும் எடுத்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்சி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-1 என சமனிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஜேன்மன் மலானுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.