SL vs WI, 2nd ODI: மீண்டும் அரைசதம் விளாசிய அசலங்கா; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

Updated: Wed, Oct 23 2024 22:22 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. அதன்பின் 44 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - அலிக் அதனாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அலிக் அதனாஸ் ஒரு ரன்னில் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான பிராண்டன் கிங்கும் 16 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேசி கார்டி 6 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ், அல்ஸாரி ஜோசப் என அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 58 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரூதர்ஃபோர்டுடன் இணைந்த குடகேஷ் மோட்டி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடிய வந்த ரூதர்ஃபோர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூதர்ஃபோர்ட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 80 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குடகேஷ் மோட்டி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து 50 ரன்களை எடுத்திருந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 36 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. 

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 9 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த நிஷன் மதுஷ்கா - சதீரா சமரவிக்ரமா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்துடம் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிஷன் மதுஷ்கா 38 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து 38 ரன்களை எடுத்திருந்த நிலையில் சதீரா சமரவிக்ரமாவும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா மற்றும் ஜனித் லியானகே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ஜனித் லியானகே 24 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 38.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை