இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழிவிற்கு ஜெய் ஷா தான் காரணம் - அர்ஜுன ரணதுங்கா!

Updated: Mon, Nov 13 2023 18:57 IST
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழிவிற்கு ஜெய் ஷா தான் காரணம் - அர்ஜுன ரணதுங்கா! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. 1992 உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்ற இலங்கை முரளிதரன், மலிங்கா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்களால் உலகத்திற்கே சவாலை கொடுத்து 2014 டி20 உலகக் கோப்பையையும் வென்றது.

ஆனால் அவர்கள் ஓய்வுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திணறும் இலங்கை 2022 ஆசிய கோப்பையை வென்றதால் மறுமலர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜனவரியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவிடம் 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி, 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 50 ரன்களுக்கு சுருண்டு அவமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலைமையில் சனாக்கா, ஹஸரங்கா போன்ற சில முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் பின்னடைவுடன் 2023 உலகக் கோப்பையில் விளையாடிய அந்த அணி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி கொஞ்சம் கூட முன்னேறாமல் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த அடுத்தடுத்த தோல்விகளால் ஏமாற்றமடைந்த இலங்கை விளையாட்டு துறை தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அதிரடியான உத்தரவிட்டது.

அப்படி வாரியத்தில் தங்களின் விதிமுறையை தாண்டி அரசு தலையிட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிப்பதாக கடந்த வாரம் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது போக 2023 உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தை மட்டுமே பிடித்த இலங்கை 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி மற்றுமொரு அவமானத்தை சந்தித்து அதள பாதாளத்தில் தவிக்கிறது.

இந்நிலையில் இலங்கை வாரியம் இன்று இப்படி தரைமட்டமாக கிடப்பதற்கு இந்திய வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தான் காரணம் என்று ரணதுங்கா பரபரப்பான விமர்சனத்தை வைத்துள்ளார். குறிப்பாக ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் ஜெய் ஷா இலங்கை வாரியத்தை மறைமுகமாக நடத்துவதாக தெரிவிதுள்ளார்

இது குறித்து பேசிய அவர், “இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவதே ஜெய் ஷா தான். இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெய்ஷா கொடுக்கும் அழுத்தத்தால் அழிந்து வருகிறது. இந்தியாவிலிருக்கும் ஒரு நபர் இலங்கையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தை நடத்தி வருகிறார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில நிர்வாகிகளுடன் தொடர்பு இருப்பதால் ஜெய்ஷாவும் பிசிசிஐயும் இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி தாங்கள் சொல்லும்படி நடக்க வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள் என்றும் ரணதுங்கா குற்றச்சாட்டு இருக்கிறார்.

மேலும் ஜெய்ஷா இவ்வளவு சக்தி மிகுந்த நபராக இருப்பதற்கு காரணமே அவருடைய தந்தை மத்திய உள்துறை அமைச்சராக இருப்பது தான்” என்றும் ரணதுங்கா சாடியுள்ளார். தற்போது ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் இலங்கை அணி ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பதால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை