SLW vs INDW, 2nd ODI: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!

Updated: Mon, Jul 04 2022 18:00 IST
SLW vs INDW, 2nd ODI: Record opening partnership guided India to a thumping win over Sri Lanka in t (Image Source: Google)

இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்திய அணி. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

இம்முறையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காஞ்சனா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்த இலங்கை அணி இந்தமுறையும் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்துள்ளது.

இதையடுத்து இலக்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் ஆரம்பம் முதல் இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். 10 ஓவர்களில் 55 ரன்களும் 20 ஓவர்களில் 113 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். 

இதில் மந்தனா 56 பந்துகளிலும், ஷஃபாலி வர்மா 57 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். மந்தாவுக்கு இது 23ஆவது ஒருநாள் அரை சதம். ஷஃபாலிக்கு இது 4ஆவது அரைசதம் கடந்தனர். சில கேட்சுகளை நழுவ விட்டதால் கடைசி வரை இலங்கை அணியால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. 

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் இந்திய அணி 25.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதோடு ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 

இதில் மந்தனா 94, ஷஃபாலி 71 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இலங்கைக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த இந்தியக் கூட்டணி என்கிற பெருமையை இருவரும் பெற்றார்கள். 

மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் ஒரு விக்கெட்டும் இழக்காமல் விரட்டிய அதிகபட்ச இலக்கும் இதுதான். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஜூலை 7ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை