ENGW vs INDW, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

Updated: Fri, Sep 16 2022 08:38 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமனிலையில் இருந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, மேகனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேமலதா, ஸ்நே ராணா என அனைவரும் சொற்ப ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். 

பின்னர் தீப்தி சர்மா - ரிச்சா கோஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபியா டாங்க்லி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய டேனியல் வையட் 22 ரன்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோபியா டாங்க்லியும் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் அலிஸ் கேப்ஸி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியையும் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை