ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 428 ரன்கள் குவித்து அசத்தியது.

Advertisement

அந்த அணிக்கு கேப்டன் பவுமா ஆரம்பத்திலேயே 8 ரன்களில் அவுட்டாகி சென்ற போதிலும் அடுத்ததாக வந்த வேன்டெர் டசனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டசன் 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 108 ரன்கள் குவித்து அசத்தினார்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் இலங்கை பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய ஐடன் மார்க்ரம் வெறும் 49 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக்கோப்பை வரலாற்றில் வேகமாக சதமடித்த வீரராக சாதனை படைத்து மொத்தம் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் (428/5) பதிவு செய்த அணியாக ஆஸ்திரேலியாவின் சாதனையை உடைத்த தென் ஆப்பிரிக்கா புதிய வரலாறு படைத்தது. 

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையையும் உடைத்த தென்னாப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2009இல் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா 414/7 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

அதை விட இந்த போட்டியில் குவிண்டன் டீ காக், வேன்டெர் டசன், ஐடன் மார்க்ரம் ஆகிய 3 வீரர்கள் சதமடித்துள்ளனர். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3 சதங்களை பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையையும் தென் ஆப்பிரிக்கா படடைத்துள்ளது. கடந்த 1975 முதல் நடைபெற்று வரும் 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் வரை 450க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்ற போதிலும் அதில் எதிலுமே இது போல் 3 வீரர்கள் சதமடித்ததில்லை.

அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 400+ ரன்கள் அடித்த அணி என்ற சாதனையும் தென் ஆப்பிரிக்கா தன்வசம் வைத்துள்ளது. இதுவரை 3 முறை 400+ ரன்கள் அடித்துள்ள தென் ஆபிரிக்காவை தவிர்த்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு முறை மட்டும் 400+ ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News