ஐபிஎல் ஏலம் 2022: ஸ்ரீசாந்தின் உணர்ச்சிபூர்வமான ட்வீட்!
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இந்த ஆண்டு களமிறங்கவுள்ள நிலையில், இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீசாந்த் தன்னுடைய பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றதற்கான மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறுகையில்,“எல்லோரையும் நேசிக்கிறேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. உங்களின் ஒவ்வொருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி ஏலத்தில் எனக்காகவும் பிரார்தனை செய்யுங்கள். ஓம் நம சிவயா” என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் ஏழு ஆண்டு தடை விதிக்கப்பட்டு திரும்பிய ஸ்ரீசாந்த் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அலி கோப்பையில் கேரளாவுக்காக விளையாடினார், அதில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.