CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!

Updated: Fri, Jun 30 2023 20:29 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 2ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெலவாயோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நெதர்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, சரித் அசலங்கா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த திமுத் கருணரத்னே - தனஞ்செய டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பின் கருணரத்னே 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய டி சில்வா 93 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தடுமாற 47.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் வான் பீக், பாஸ் டி லீட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு திரும்பினர்.  பின்னர் களமிறங்கிய வெஸ்லி பரேஸி - பாஸ் டி லீட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் வெஸ்லி பரேஸி அரைசதம் கடக்க, மறுபக்கம் பாஸ் டீ லீட் 41 ரன்களிலும், தேஜா நிடமனுரு ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, வெஸ்லி பரேஸியும் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒருபக்கம் அதிர காட்ட மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகன் வான் பீக், சகிப் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

இதில் கடைசிவரை போராடிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்துடன் 67 ரன்களைச் சேர்த்து களத்தில் இருக்க, மறுபக்கம் எந்த வீரர்களும் நிலைக்கமுடியாமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் 40 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி தரப்பில் சிரப்பாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், உலகக்கோப்பை தொடருக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை