ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஏற்கெனவே 8 அணிகள் தங்கள் இடத்த உறுதிசெய்த நிலையில், மீதமுள்ள இரு அணிகளின் தேர்வு தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. அந்தவகையில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அபுதாபியில் நடைபெற்றது. இத்தொடரின் அரையிறுதிக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீகர், இலங்கை அணிகள் முன்னேறின.

Advertisement

நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீயா பால் 45 ரன்களையும், அரின் கெல்லி 35 ரன்களையும் சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் கேத்ரின் பிரைஸ் 4 விக்கெட்டுகளையும், ரேச்சல் ஸ்லேடர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து மகளிர் அணி சஸ்கியா ஹார்லே 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் இணைந்த மேகன் மெக்கல் - கேப்டன் கேத்ரின் பிரைஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மெக்கன் மெக்கல் 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேத்ரின் பிரைஸ் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் முதல் முறையாக முன்னேறி அசத்தியுள்ளது. 

அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விஸ்மி கருணரத்னே 45 ரன்களையும், ஹர்ஷிதா மாதவி 24 ரன்களையும், கேப்டன் சமாரி அத்தப்பத்து 21 ரன்களையும் சேர்த்தனர். ஐக்கிய அரபு அமீகர அணியில் வைனவி மஹேஷ், ஈஸா ரோஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியில் கேப்டன் ஈஸா ரோஹித் அரைசதம் கடந்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதில் ஈஸா ரோஹித் 66 ரன்களில் விக்கெட்டை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் யூஏஇ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிப்பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News