SL vs IRE, 1st Test: ஜெயசூர்யா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை இன்னிங்ஸ் வெற்றி!

Updated: Tue, Apr 18 2023 18:27 IST
Sri Lanka Thrash Ireland By An Innings And 280 Runs In First Test (Image Source: CricketNmore)

இலங்கைக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது.

இதில் தனது 15ஆவது சதத்தை எட்டிய கேப்டன் திமுத் கருணாரத்னே 178 ரன்களும் , 8ஆவது சதம் அடித்த குசல் மென்டிஸ் 140 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமல் 18 ரன்களுடனும், ஜெயசூர்யா 12 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் ஜெயசூர்யா 16 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த் தினேஷ் சண்டிமல் - சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் சதமடித்தும் அசத்தினர். 

இதன்மூலம் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்களை சேர்த்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் கடைசிவரை களத்தில் இருந்த சண்டிமல் 102 ரன்களையும், சமரவிக்ரமா 104 ரன்களையும் சேர்த்திருந்தனர். அயர்லாந்து தரப்பில் அதிகப்டசமாக கர்டிஸ் காம்பெர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி தொடத்திலேயே முர்ரெ கம்மின்ஸ், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இனைந்த ஜேம்ஸ் மெக்கலம் - ஹேரி டெக்டர் இணை ஓரளவு சமாளித்து விக்கெட் இழப்பை சிறுது நேரம் தடுத்து நிறுத்தினர். 

பின் 35 ரன்களில் மெக்கலமும், 34 ரன்களில் ஹேரி டெக்டரும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பீட்டர் மூர், ஜார்ஜ் டக்ரெல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து, 3ஆம் நாள் ஆட்டத்தை லோர்கன் டக்கர் 21 ரன்களுடனும், ஆண்டி மெக்பிரைன் 5 ரன்களிலும் தொடர்ந்தனர். இதில் மெக்பிரைன் 7 ரன்களிலும், மார்க் அதிர் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கரும் 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், ஃபாலோ ஆனையும் பெற்றது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்தி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணியின் பேட்டர்கள் மீண்டும் சொதப்பினர். 

அந்த அணியில் அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 42 ரன்களையும், கர்டிஸ் காம்பெர் 30 ரன்களையும், ஜார்ஜ் டக்ரெல் 32 ரன்களையும் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யார் 3 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரபாத் ஜெயசூர்யா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை