இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். அவருக்கு துணையாக தினேஷ் சண்டிமால் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடக்க, அந்த அணி 326 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மேலும் இங்கிலாந்து அணிக்கு 205 ரன்களையும் இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஜோ ரூட் 62, ஹாரி புரூக் 32, ஜேமி ஸ்மித் 39 ரன்களைச் சேர்த்ததன் மூலம், 57.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா, “முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் எங்களுடையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்று நான் கூறுவேன், இருப்பினும் ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் சரியான பகுதிகளில் பந்தை வீசவில்லை, பீல்டிங்கில் கூட, நாங்கள் எங்கள் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.
எங்கள் பேட்டிங் வரிசை குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது, எந்த சூழ்நிலையிலும் இங்கிலாந்து பந்துவீச்சு வரிசைக்கு எதிராகவும் அவர்கள் ரன்களை எடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் கமிந்து மெண்டிஸ் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அடுத்த டெஸ்டில் நாங்கள் எங்கள் திட்டங்களுடன் இருக்க வேண்டும் மற்றும் அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.