விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்ட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அரைசதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. 

Advertisement

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதன்பின் போட்டி முடிந்து பேசிய ஸ்டார்க், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இது மிகவும் சிறப்பான ஒரு இரவு. இந்த போட்டி மட்டும் இல்லாமல், இந்த தொடர் முழுவதிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளோம். எங்கள் அணியில் மிக சிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருப்பதால், பந்துவீச்சே எங்களது பெரிய பலமாக இருந்தது.

அதேபோல் பேட்ஸ்மேன்கள், நிர்வாகிகள் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலமே எங்களுக்கு இந்த வெற்றி சாத்தியமானது. நாங்கள் ஒரு நிலையான பக்கமாக இருந்து வருகிறோம், எங்களிடம் ஒன்று அல்லது இரண்டு பேர் தனித்து நிற்கவில்லை, இது அனைவரின் பங்களிப்புகளாகும். தனிப்பட்ட முறையில் பங்களிப்பது சிறந்தது, ஆனால் நாங்கள் அனைவரும் பங்களிப்பது வெற்றியின் ஒரு பெரிய பகுதி என கருதுகிறேன். இந்த போட்டியில் நாங்கள் டாஸை இழந்து முதலில் பந்துவீச இருந்ததால் இந்த மைதானம் எப்படி செயலடும் என்ற சிந்தனை இருந்துகொண்டே இருந்தது.

ஏனெனில் சில இரவுகளுக்கு முன்பு இங்கு ஆட்டத்தைப் பார்த்ததால், விக்கெட் என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. அதனால் இந்த சூழலில் எப்படி செயல்படுவோம் என்பது பற்றி பேசினோம். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பந்துவீச்சாளர்களையும், தனது ஃபீல்டுகளையும் பயன்படுத்திய விதம் அருமையாக இருந்தது. மேலும் இந்த சீசனில் நான் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தேன். மேலும் நான் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடமால் இருந்ததன் காரணமாக என் மீதான அழுத்தம் கொஞ்சம் அதிகளவில் இருந்தது.  ஆனால் எனக்கு இருந்து அனுபவம் என்மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவியது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News