இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதோடு தன் முதல் சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இந்தப் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் விளையாட வந்தார் சஞ்சு சாம்சன். 

Advertisement

அப்போது தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததோடு பேட்டிங் வரிசையில் இடம் பெற்று இருந்த ஒரே ஒரு அனுபவ பேட்ஸ்மேன் கே எல் ராகுலும் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் திலக் வர்மாவுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடி பின் கடைசி 15 ஓவர்களின் போது வேகம் எடுத்தார் சஞ்சு சாம்சன். 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது.

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தன. இதனால் அந்த அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 81 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறுவதும் பின் நீக்கப்படுவதுமாக இருந்து வந்த சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்வை இந்த சதம் மாற்றப் போகிறது என சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "சஞ்சு சாம்சன் ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது அவரின் ஷாட் தேர்வு தான். இதற்கு முன் அவர் பல முறை நல்ல துவக்கம் கிடைத்தும் ஆட்டமிழந்து இருக்கிறார். ஆனால், இன்று அவரை நாம் குறை சொல்ல முடியாது. தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார். தவறான பந்துகளை மட்டும் அடித்து சதம் அடித்து இருக்கிறார்.

இந்த சதம் அவரது கிரிக்கெட் வாழ்வையே மாற்றப் போகிறது. இனி இரண்டு விஷயம் நடக்கும். முதல் விஷயம் இந்த சதம் காரணமாக அவருக்கு இனி அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இரண்டாவது விஷயம், சஞ்சு சாம்சன் தன்னைத் தானே நம்பத் தொடங்குவார். சில சமயம் வாய்ப்பு கிடைத்தும் அதிர்ஷ்டம் இருக்காது. ஒரு நல்ல பந்து அல்லது அபாரமான கேட்ச் நம்மை வீழ்த்தும் போது நாம் இந்த இடத்துக்கு தகுதியான நபர் தானா என்ற சந்தேகம் எழும். 

ஆனால், இந்த சதம் இந்த இடத்துக்கு தகுதியான நபர் தான் என நம்பிக்கை அளிக்கும். அவர் இந்த இடத்துக்கு எப்போதும் தகுதியான நபர் தான். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் சரியாக செயல்பட முடியாமல் இருந்தது. ஆனால், இன்று மற்றவர்களுக்காக மட்டுமின்றி தனக்காகவும் அவர் சாதித்து இருக்கிறார்" என்று பாராட்டியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News