இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறதி. இதில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மோசமாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. 

Advertisement

முதலில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை பந்துவீச்சில் வாரி வழங்கி தோல்வியை சந்தித்த இந்தியா, நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement

அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4, பிரிட்டோரியஸ் 4, வேன் டெர் டுஷன் 1 என 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த புவனேஸ்வர் குமார் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கி மிரட்டிய ஹென்றிச் க்ளாஸென் 7 பவுண்டரி 5 சிக்சருடன் பறக்கவிட்டு 81 (46) ரன்கள் சேர்க்க அவருடன் கேப்டன் பவுமா 35 (30) ரன்களும் டேவிட் மில்லர் 20* (15) ரன்களும் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றி பெற்றது.


இதனால் சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து அவமானத்திற்கு உள்ளாகியுள்ள இந்தியா அடுத்த 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு மோசமான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் ஒரு தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் இந்தியா இப்படி திணறுவது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. மேலும் இனி வரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற காரணத்தால் ஜூன் 14இல் நடைபெறும் இத்தொடரின் 3ஆவது போட்டியில் 11 பேர் இந்திய அணியில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் முதல் போட்டியில் தோல்வியடைந்த போதிலும் நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட இந்திய வீரர்கள் 2-வது போட்டியில் வெற்றியை பதிவு செய்ய தவறினர். இந்நிலையில் 3-வது போட்டியில் உம்ரான் மாலிக்க்கு நிச்சயம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Advertisement

வெறும் 22 வயதிலேயே ஐபிஎல் 2022 தொடரில் 150 கிலோமீட்டர் வேகத்தில் மிரட்டலாக பந்துவீசி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட அவர், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை (157.0 கி.மீ) வீசிய இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார். மொத்தம் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து உலகின் பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை அள்ளிய அவர் டெல்லியில் நடந்த முதல் போட்டியிலேயே அறிமுகமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வேகத்திற்கு ஈடாக ரன்களை கொடுத்ததாலும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்ற சீனியர்கள் இருப்பதாலும் யோசித்து பொறுமையாகத்தான் வாய்ப்பளிக்கப்படும் என்று தொடர் துவங்கும் முன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இருப்பினும் உம்ரான் மாலிக் போன்ற மிரட்டலான வேகத்தில் வீசும் ஒருவரை எதிர்கொள்ள நாங்கள் விரும்ப மாட்டோம் என்று தொடர் துவங்குவதற்கு முன்பே தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா வெளிப்படையாகப் பேசினார்.

அப்படிப்பட்ட அவருக்கு வாழ்வா – சாவா என்ற 3ஆவது போட்டியில் கண்டிப்பாக வாய்ப்பு கொடுங்கள் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கர் தான் நான் பார்த்து வியந்த முதல் வீரர் ஆவார். அந்த வரிசையில் உம்ரான் மாலிக் 2ஆவது வீரர். எனவே அவர் நிச்சயமாக 3ஆவது போட்டியில் விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News