சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆண்டு சீசனிலும் தொடர்வதற்கு டேவிட் வார்னர் விருப்பமாக இருந்தாலும், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் கேப்டனான வார்னரை பெஞ்ச்சில் அமரவைத்தனர்.

Advertisement

இந்த சீசனின் நடுப்பகுதியில் வார்னரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பிருந்து சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டமும் ஆட்டம் கண்டது. வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் சில போட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் அமரவைக்கப்பட்டார். வார்னர் என்ற ஒரு சீனியர் வீரர் மட்டும் பெஞ்ச்சில் அமரவைக்கப்படவில்லை என்று சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ் விளக்கமும் அளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையைப் பெற்றுக்கொடுத்த வார்னர், ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வார்னருக்கு கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் அணி நிர்வாகம் கூறவில்லை. அவரை நடத்திய முறையும் சரியில்லை.

அனைத்து சீசன்களிலும் மிகச் சிறப்பாக ஆடிய வார்னர், இந்த ஐபிஎல் சீசனில் 8 இன்னிங்ஸில் 195 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில் சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கமும், காரணமும் தெரிவிக்கவில்லை. அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய வார்னர், “என்ன காரணம் என 100 சதவீதம் எனக்குத் தெரியாது. சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர் மீதும், பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ், லட்சுமண், டாம் மூடி, முரளிதரன் ஆகியோர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஒரு முடிவு எடுக்கப்படும்போது, அது ஒருமனதாக எடுக்க வேண்டும். 

ஆனால், எனக்கான மாற்று வீரர் யார், என்னை யார் தேர்வு செய்ய வேண்டும், என்னை யார் விரும்பவில்லை என எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், கடைசி நாளில், நான் விளையாடப் போவதில்லை என்ற தகவல் மட்டும் என்னிடம் கூறப்பட்டது.

எனக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் கூறப்படவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து சில விஷயங்கள் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் நான் சன்ரைசர்ஸ் அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்.

Advertisement

ஆனால், 4 போட்டிகளில் மட்டும்தான் மோசமாக விளையாடினேன், 2 முறை ரன் அவுட் ஆகினேன். அதிலும் சென்னை போன்ற மெதுவான, மந்தமான ஆடுகளத்தில்தான் இது நடந்தது. இதுபோன்ற கசப்பான விஷயங்களை ஜீரணிப்பது கடினமானது. ஆனால், நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் , பதில் இனிமேல் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆதலால் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்ந்துதான் ஆக வேண்டும்.

அடுத்துவரக் கூடிய ஐபிஎல் ஏலத்தை நோக்கியிருக்கிறேன். சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்துவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால் முடிவு உரிமையாளர்களிடம் உள்ளது” எனது தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News