திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Aug 09 2023 14:24 IST
திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது தொடரில் நீடிக்கிறது.

இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன திலக் வர்மா மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்கள் போலான முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். முதல் டி20 போட்டியில் 39 ரன்கள் எடுத்து அரை சதத்தை தவறவிட்ட அவர், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் எடுத்து தனது முதல் சர்வதேச அரை சதத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நேற்று வென்றே ஆக வேண்டிய மிக முக்கியமான போட்டியில் சக மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரரான இந்திய அணியின் நட்சத்திர டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் உடன் சேர்ந்து மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவி செய்தார். இவர் தந்த ஒத்துழைப்பு சூரியகுமார் யாதவை அழுத்தம் இல்லாமல் அவரது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது. இறுதியில் ஆட்டத்தை சூரியகுமார் மாற்றி இந்தியாவின் கைகளில் தந்து ஆட்டம் இழந்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

தற்பொழுது திலக் வர்மா பற்றி சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “திலக் வர்மா இந்தச் சிறிய வயதில் மிகப்பெரிய முதிர்ச்சியை காட்டுவதாக நான் நினைக்கிறேன். அவர் என்னுடன் பேட்டிங் செய்த விதம் மற்றும் நாங்கள் இருவரும் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஒன்றாக விளையாடி வருகிறோம். அங்கும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இப்போது இங்கே இந்த மேடையில் அவர் மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கிறார். இந்த வயதில் இவ்வளவு பெரிய முதிர்ச்சிக்கான பெருமை எல்லாப் புகழும் அவரது கடின உழைப்புக்கு போய்ச் சேரும். 

இதை அவர் எப்பொழுதும் தொடர்வார் என்று நான் நம்புகிறேன். ஆமாம் திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான். அவர் மனதளவில் மிகத் தெளிவாக இருக்கிறார். அவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர் என்ன செய்ய விரும்புகிறார் இன்றைய ஆட்டத்தில் என்ன செய்ய விரும்பினார் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். அவர் மனதளவில் மிகவும் வலிமையானவர். நீங்கள் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் வந்து இந்திய அணிக்காக விளையாடும் பொழுது உங்களுக்கு மிகவும் தேவையான விஷயம் இதுதான். இது அவரிடம் அதிகமாகவே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை