டி20 உலகக்கோப்பை: தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா; அணியை தூக்கி நிறுத்திய விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ரோஹித் சர்மா சந்தித்த முதல் பந்திலும், கேஎல் ராகுல் 3 ரன்களிலும் ஷாகின் அஃப்ரிடி ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர்.
அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரிஷப் பந்த் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 39 ரன்களை எடுத்த கையோடு ஷதாப் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் அவரும் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்களையும், ரிஷப் பந்த் 39 ரன்களையும் சேர்த்தனர்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.