பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை - மேத்யூ ஹைடன்!

Updated: Mon, Nov 07 2022 20:31 IST
T20 World Cup: We Are Dangerous, Just Understand And Appreciate That, Says Matthew Hayden In Viral D (Image Source: Google)

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் ஒன்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் இரண்டிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் 2இல் தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து 5 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றை முடித்ததால் பாகிஸ்தான் ரூட் கிளியர் ஆனது. அந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

குரூப் 2ல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் குரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் 9ம் தேதி அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதிக்கு முன்னேறிய மற்ற அணிகளை பாகிஸ்தானை காட்டி மிரட்டுகிறார் அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன். 

பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பைக்கு வரும்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருந்தது. மிடில் ஆர்டர் பலவீனமாக இருந்தது. அதுவே பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாபர் ஆசாமும், ரிஸ்வானும் தான் ஒழுங்காக விளையாடவில்லை. ஃபகர் ஸமானுக்கு மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்ட முகமது ஹாரிஸ் கடைசி 2 போட்டியில் அதிரடியாக விளையாடி மிரட்டினார். ஷான் மசூத், ஷதாப் கான், இஃப்திகார் அகமது ஆகியோரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு எப்போதுமே மிரட்டலானதுதான். ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஆகிய நால்வரும் தங்களது வேகத்தில் எதிரணிகளை மிரட்டுகின்றனர். ஸ்பின் பவுலிங்கில் ஷதாப் கான், முகமது நவாஸுடன் தேவைப்படும்போது இஃப்திகாரும் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்துவந்த நிலையில், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், ஷான் மசூத் ஆகியோர் நம்பிக்கையளிப்பதால் பாகிஸ்தான் அணி உற்சாகமும் உத்வேகமும் அடைந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள அந்த அணியின் ஆலோசகரும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவானுமான மேத்யூ ஹைடன், “பாகிஸ்தான் அணி உண்மையாகவே எதிரணிகளுக்கு பெரிய அபாயமாக திகழ்கிறது. இப்போதைய சூழலில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை. ஒரு அணி கூட இல்லை. பாகிஸ்தான் அணியை காலி செய்துவிட்டதாக  நினைத்தார்கள். ஆனால் இப்போது பாகிஸ்தனை ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை