ஐபிஎல் 2024: டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை மீண்டும் கைப்பற்றியது டாடா நிறுவனம்!

Updated: Sat, Jan 20 2024 14:56 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 2 மாதங்களில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே டிசம்பர் மாதம் மினி ஏலம் முடிவடைந்த நிலையில், மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே, ஐபிஎல் அட்டவணையை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதனால் அணி நிர்வாகங்கள் மார்ச் முதல் வாரம் முதலே தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஜூன் 1ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், மே மாதத்தின் 2ஆவது வாரத்திலேயே ஐபிஎல் இறுதிப்போட்டி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துள்ளது.

அதன்படி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான விவோ வென்றது. அந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 2199 கோடிக்கு முடிவடைந்தது. இதனிடையே இந்தியா - சீனா இடையிலான உறவு காரணமாக, விவோ உடனான ஒப்பந்தத்தை ஐபிஎல் நிர்வாகம் முறித்து கொண்டது. இதனால் கடந்த இரு சீசன்களின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.365 கோடி கொடுக்க டாடா நிறுவனம் முன்வந்தது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சஷிப் டெண்டர் டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முன்தொகையுடன் விண்ணப்பிக்க ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்தது. இதில் திடீரென ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனம் உள்ளே வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த நிறுவனம் தரப்பில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.2500 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தது. இதனால் ஐபிஎல் நிர்வாக குழு தரப்பில் டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி ஒப்புக் கொண்டதால், இறுதியாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது.

இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு டாடா நிறுவனத்துடன் ஐபிஎல் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பு உரிமை பிரிந்ததன் காரணமாக பிசிசிஐ-க்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிக வருமானம் கிடைத்தது. தற்போதி டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தமும் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால், ஐபிஎல் தொடரின் மதிப்பு அடுத்த உச்சத்தை எட்டியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை