டி20 உலகக்கோப்பை: இந்தியா அபாயகரமான அணி - ஸ்டீவ் ஸ்மித்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ள இந்திய அணி, பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்படுகிறது. டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இந்திய அணி, அதற்காக தோனியை ஆலோசகராகவும் நியமித்துள்ளது. தோனியின் ஆலோசனைகள், வியூகங்கள் கண்டிப்பாக இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும்.
அதுமட்டுமல்லாது, டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கும் இதே அமீரக ஆடுகளங்களில் தான் ஐபிஎல் நடந்து முடிந்துள்ளது. எனவே அமீரக கண்டிஷன் இந்திய வீரர்களுக்கு நன்றாக பழக்கப்பட்டது. அந்தவகையில், இந்திய அணிக்கு கோப்பையை வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் கைகூடி வந்துள்ள நிலையில், இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித், “இந்திய அணி அபாயகரமான அணி. டி20 உலக கோப்பையை வெல்வதற்கான அனைத்து விஷயங்களும் இந்திய அணியிடம் உள்ளன. கடந்த 2 மாதங்களாக இந்திய வீரர்கள் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதால், அமீரக கண்டிஷனுக்கு நன்றாக பழக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது” என்று தெரிவித்தார்.