பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!

Updated: Thu, Apr 18 2024 12:58 IST
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய் அகுஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஹாவும் 2ரன்களுகு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 12 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, ரஷித் கான் மட்டும் ஓரளவு தக்குப்பிடித்து 31 ரன்களைச் சேர்த்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆளுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

இதில் மெக்குர்க் 20, பிரித்வி ஷா 7, அபிஷேக் போரெல் 15, ஷாய் ஹோப் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்களையும், சுமித் குமார் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக கீப்பிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த், “இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் ஒரு சாம்பியனைப் போல் விளையாட வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கினோம். அதற்கு ஏற்ப முடிவுகளும் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அணியில் உள்ள ஒவ்வொரு பந்துவீச்சாளரும் தங்களது பங்களிப்பை உணர்ந்து மிகச் சிறப்பான செயல்பாட்டை இந்த போட்டியில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இப்போட்டியில் நாங்கள் மிகக்குறைந்த இலக்கையே துரத்துவதன் காரணமாக இப்போட்டியை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க முடிவு செய்தோம். ஏனெனில் இந்த தொடரில் ஏற்கனவே நாங்கள் ரன் ரேட் அடிப்படையில் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதனை தற்போது நாங்கள் சமன்செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். மேலும் அஹ்மதாபாத் மைதானத்தில் இவ்வளவு ரசிகர்களுக்கு முன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த வெற்றியை கொண்டாடுகிறோம். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளிலும் தவறுகளை திருத்தி முன்னேற விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை