IND vs SA: இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் - இன்ஸமாம் உல் ஹக்!

Updated: Thu, Jun 16 2022 12:17 IST
The pressure is now on South Africa as this Indian side will not lose easily at home: Inzamam-ul-Ha (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு சொந்த மண்ணில் வரலாற்று தோல்வியை பரிசளித்து 2 – 0 என தொடரில் முன்னிலை பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 

அதனால் தலைகுனிவை சந்தித்த இந்தியா இந்த தொடரை வெல்ல நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கிய 3-வது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 179/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 57 (35) இஷான் கிசான் 54 (35) ரன்களை எடுக்க இறுதியில் ஹர்திக் பாண்டியா 31* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். 

அதைத்தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு இம்முறை பொறுப்புடனும் தரமாகவும் பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஆரம்பம் முதலே டேவிட் மில்லர் உட்பட முக்கிய வீரர்களை சீரான இடைவெளியில் அவுட் செய்தனர்.

இறுதிவரை 19.1 ஓவரில் 131 ரன்களுக்கு ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனாலும் 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ள இந்தியா அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகளிலும் வென்றால்தான் சொந்த மண்ணில் கோப்பையை வென்று தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் டாஸ் என்பது இந்தியாவின் பக்கம் விழாமல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

எனவே எஞ்சிய 2 போட்டிகளில் டாஸ் அதிர்ஷ்டமாக கிடைக்கவில்லை என்றாலும் 3ஆவது போட்டியை போல பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பொறுப்புடன் திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி தாமாக வந்து சேரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் ரோஹித், விராட், ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்களுடன் 3-வது போட்டியில் வென்ற இந்தியா நிச்சயம் எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று கோப்பையை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார். சொந்த மண்ணில் எப்போதும் வலுவாக இருக்கும் இந்திய அணி தோல்விக்கு அஞ்சாமல் அடுத்த 2 போட்டிகளில் மீண்டெழுந்து வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா இன்னும் இந்த தொடரில் இருக்கிறது. தற்போது நெருக்கடி தென் ஆப்பிரிக்காவில் பக்கம் வந்துள்ளது. ஏனெனில் இந்தியா அவ்வளவு சுலபமாக சொந்த மண்ணில் தோற்காது. இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தோல்விக்கு பின் வாங்காமல் போராடுகின்றனர். 

அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் இல்லாத போதிலும் அவர்கள் வெற்றி பெற்றது அபாரமானது. சஹால், படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா எளிதாக தொடரை வெல்வது போல் இருந்தது. ஆனால் இந்திய பவுலர்கள் அதை தடுத்து நிறுத்தி விட்டதால் இந்த தொடர் சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது.

இஷான், ருதுராஜ் போன்ற வீரர்களின் ஆட்டம் எஞ்சிய அணியினரின் உத்வேகத்தை தட்டி எழுப்பியுள்ளது. ஒரு 2-வது தரமான அணி இப்படி வெற்றிக்காக போராடுவது இந்திய அணியின் ஆழத்தை காட்டுகிறது. மேலும் அண்டர்-19 அணியுடன் பணியுடன் பணியாற்றிய ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை