பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான விக்கெட்டாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வெல்லாலகே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய சரித் அசலங்கா சதமடித்து அசத்தியதுடன் 127 ரன்களைச் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கன்னொலி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 41 ரன்களையும், ஆரோன் ஹார்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “இப்போட்டி டாஸ் பெரிதளவில் தாக்கத்தை ஏறபடுத்தவில்லை. இந்த பிட்ச் எல்லா சமயத்திலும் ஒரே மாதிரிதான் இருந்தது. இதில் வித்தியாசம் என்றால் அது சரித் அசலங்காவின் பேட்டிங் மட்டும் தான். மற்றபடி இங்கு பெரிதளவில் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில் அவர் சக அணி வீரர்களுடன் இணைந்து சில பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். அதனை எங்கள் வீரர்கள் செய்ய தவறிவிட்டனர்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான விக்கெட்டாக இருந்தது. இருப்பினும் இங்கு நிறைய பந்து நிறைய ஸ்பின்னாக வில்லை மாறாக அது, சறுக்கியது போல் இருந்தது. அதனால் பேட்டர்களால் இங்கு சரிவர தங்கள் ஷாட்டுகளை விளையாட முடியாததால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இன்னும் சில தினங்களில் ஐசிசி தொடர் வரவுள்ளதால் நாங்கள் அனைத்தையும் சரிசெய்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.