உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இஷாந்த், சிராஜை பாரட்டிய கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இரு இடத்தில் இருக்கும் அணிகளான நியூசிலாந்து - இந்தியா வரும் வெள்ளிகிழமை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இங்கிலாந்தின், சவுத்தாம்படன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் இப்போட்டியில் களம் காணவுள்ளது.
இதில் இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை விளையாடியது. அதில் சுப்மன் கில், ரிஷப் பன், ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் என பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் மற்றும் சிராஜ் இருவரும் ஒவ்வொரு நாளும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோலி வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்" என்று சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இணைத்து பகிர்ந்திருக்கிறார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருவரும் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.