நியூசிலாந்தில் விளையாடிய டி20 தொடரை வென்ற இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது. டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இந்த சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், உம்ரான் மாலிக், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டார்கள்.

Advertisement

இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்துக்கு இந்த சுற்றுப்பயணம் முழுவதும் ஓப்பனிங் முதல் மிடில் ஆர்டர் வரை அனைத்து இடங்களிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

Advertisement

ஏனெனில் ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் பெற்று விட்ட அவர் இந்த சுற்றுப்பயணத்தில் முழுமையாக 6 போட்டிகளில் விளையாடியும் எதிலுமே 20 ரன்களை தாண்டவில்லை. மறுபுறம் காலம் காலமாக வாய்ப்புக்காக தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் வழக்கம் போல இந்த சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளில் வெறும் ஒரு வாய்ப்பை பெற்று அதில் 36 ரன்கள் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் 6ஆவது பவுலர் தேவை என்பதற்காக மனசாட்சின்றி நீக்கப்பட்ட அவருக்கு மற்றொரு அநீதியும் நிகழ்ந்துள்ளது.

ஏனெனில் இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளிலும் சொதப்பிய ரிஷப் பந்த் அடுத்ததாக வங்கதேசத்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதில் அவரை விட சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமரும் வாய்ப்பை கூட பெறவில்லை என்பது அனைவருக்கும் வேதனையை கொடுக்கிறது. அந்த நிலையில் வங்கதேச ஒருநாள் தொடருக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியில் அசத்தி ரஞ்சி கோப்பையில் அபாரமாக செயல்பட்ட ரஜத் படிதார் தேர்வாகியுள்ளார்.

ஆனால் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு கொடுக்காத இந்திய நிர்வாகம் இவரை எதற்காக தேர்வு செய்தது? என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு சஞ்சு சாம்சனே விளையாடியிருக்கலாமே என்று கூறும் அவர் ராகுல் திரிபாதி, கடந்த வாரம் இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்த தமிழகத்தின் ஜெகதீசன் போன்ற வீரர்களை தேர்வு செய்தாலும் நீங்கள் ரிஷப் பந்துக்கு தான் வாய்ப்பு கொடுக்கப் போகிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சைமன் டல், “இந்திய அணி நிர்வாகம் ரஜத் படிதாரை விரும்பி தேர்வு செய்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஏற்கனவே உங்களிடம் ஏராளமான பேட்ஸ்மேன்கள் காத்துக்கிடக்கிறார்கள். குறிப்பாக அந்த இடத்தில் சஞ்சு சம்சன் விளையாடுவதற்கு ஏற்கனவே தகுதியானவராக உள்ளார். ஆனால் அவர்கள் அவரை கழட்டி விட்டுள்ளார்கள். பின்னர் எதற்காக ரஜத் படிதாரை தேர்வு செய்துள்ளீர்கள்? அதாவது நாம் ஏற்கனவே நிறைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பார்த்துள்ளோம். எடுத்துக்காட்டாக கடந்த இரண்டரை வாரங்களுக்கு முன்பாக சென்னையிலிருந்து ஜெகதீசன் எனும் இளம் வீரர் ஏராளமான ரன்களை குவித்தார்.

Advertisement

அந்த வகையில் உங்களிடம் ஏராளமான வீரர்கள் உள்ளார்கள். அதே போல் ராகுல் திரிபாதி சிறந்த வீரர் அவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் நாம் எதிர்பாராத அளவுக்கு அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தக்கூடிய நல்ல டி20 வீரர்களில் ஒருவர். ஆனால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்காக இடத்தை நிரப்பும் வகையில் வாய்ப்பு கொடுங்கள். ஏனெனில் அதில் நீங்கள் இன்னும் முழுமை அடையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News