திலக் வர்மா ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சேவாக் அட்வைஸ்!

Updated: Mon, May 29 2023 15:18 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இந்நிலையில் 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய வெற்றிகரமான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது.  குறிப்பாக கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்த அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியும் பேட்டிங் துறையில் மிரட்டலாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தியது.

இருப்பினும் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்திடம் தோற்று வெளியேறிய அந்த அணி இந்தளவுக்கு போராடி வந்ததே பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். மேலும் அந்த அணிக்கு நேஹல் வதேரா, ஆகாஷ் மாத்வால் போன்ற சில வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களும் இந்த சீசனில் கிடைத்தனர். அதில் முதன்மையானவராக இளம் வீரர் திலக் வர்மா மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவைப் போல் பேட்டிங் செய்வதாக ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

அந்த நிலையில் இந்த சீசனில் காயத்தால் முழுமையான வாய்ப்பு பெறவிட்டாலும் 11 இன்னிங்ஸில் 343 ரன்களை 164.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் 43 ரன்களை 307.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டு வெறித்தனமாக வெற்றிக்கு போராடி அவுட்டானது அனைவரும் பாராட்டுகளை பெற்றது. 

இந்நிலையில் அடுத்த சீசனில் இன்னும் அசத்துவதற்கு இடைப்பட்ட காலங்களில் ஃபிட்னஸ் மற்றும் சூர்யகுமார் போல புதிய ஷாட்டுகளை அடிப்பதற்கு அவர் பயிற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளும் சேவாக் அது பற்றி 1999இல் முன்னாள் கேப்டன் கங்குலி தமக்கு கொடுத்த ஆலோசனையை பிரதிபலித்து பேசியது பின்வருமாறு. 

இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைக்கு அவர் 2 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று அவர் தன்னுடைய ஃபிட்னஸில் முன்னேற்றம் காண வேண்டும். மற்றொன்று தம்முடைய எந்த நுணுக்கத்தில் உழைத்து முன்னேற்றத்தை காணலாம் என்பதையும் மனதளவில் எப்படி முன்னேறலாம் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக அந்த இரண்டும் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் விளையாடும் போது நாட்கள் செல்ல செல்ல உங்களுக்கு நீங்களே சரி செய்து கொள்வீர்கள். 

ஆனால் கிரிக்கெட்டில் விளையாடாத சமயங்களில் நீங்கள் உங்களுடைய ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக சூர்யகுமார் யாதவ் சாதாரண நாட்களில் நிறைய வித்தியாசமான ஷாட்களை விளையாடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டு தற்போது மிரட்டுவதை பாருங்கள். அந்த வகையில் திலக் வர்மா தம்முடைய பலவீனத்தில் எப்படி முன்னேறலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவரது இந்த சூழ்நிலை இந்தியாவுக்காக நான் 1999இல் அறிமுகமான போது சந்தித்த சூழ்நிலைகளை நினைவுபடுத்துகிறது. 

குறிப்பாக ஒரு போட்டியில் என்னுடைய பேட்டைக்கு கீழே கொண்டு சென்றதால் பந்து என்னுடைய கால்களில் பட்டது. அதன் காரணமாக சோயப் அக்தர் என்னை அவுட் செய்தார். அப்போது தாதா கங்குலி என்னிடம் “வேகப்பந்து வீச்சுக்கு எதிராக கடினமாக பயிற்சி செய். அப்போது தான் அடுத்த முறை சிறப்பாக செயல்பட முடியும். அந்த சமயங்களில் நான் மிடில் ஆர்டரில் விளையாடியதால் ஸ்பின்னர்களை அதிகம் எதிர்கொண்டு வேகபந்து வீச்சாளர்கள் வருவதற்கு முன்பாக சதமடிக்க முயற்சிப்பேன். அதே போல திலக் வர்மா தம்முடைய வீக்னஸ் எது என்பதை கண்டறிந்து அதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை