டிஎன்பிஎல் 2023: கௌசிக் காந்தி அரைசதம்; முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 6 ரன்களுக்கும், ஜஃபர் ஜமால் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மணி பாரதி ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும் மறுபக்கம் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் ரோகின்ஸ் 16, அந்தோனி தாஸ் 12, ஃபெரேரியோ 29 என்களில் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மணி பாரதியும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகளையும், சன்னி சந்து, கார்த்திகேயன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணியில் அமித் சத்விக் - ஆகாஷ் சுர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆகாஷ் 10 ரன்களிலும், அமித் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் மான் பஃப்னாவும் 16 ரன்களில் விக்கெட்டை இழண்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய கௌசிக் காந்தி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய் ஹரிஹரனும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த கௌசிக் காந்தி 3 சிக்சர், 3 பவுண்டரி என 52 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியையும் வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் தன்வர் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.