TNPL 2024: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!

Updated: Wed, Jul 17 2024 23:46 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியானது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அத்துடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்கள் எடுத்திருந்த ராதாகிருஷ்ணன் விக்கெட்டை இழந்தார்.  அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கனேஷும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தர்.

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமித் சாத்விக் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 13 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சுபோத் பாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் 4 ரன்களி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து விமர் குமார் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த பாபா இந்திரஜித் - பூபதி குமார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதேசமயம் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன், அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பூபதி குமார் தனது அரைசதத்தை பதிவுசெய்தும் அசத்தினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூபதி குமார் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், பாபா இந்திரஜித் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியனாது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை