டிஎன்பிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ஸ்பார்டன்ஸ்

Updated: Wed, Jun 11 2025 12:08 IST
Image Source: Google

திருச்சி கிராண்ட் சேழாஸ் அணிக்கு எதிரான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடந்த 7ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு ஹரி நிஷாந்த் அதிரடியான தொடக்கத்தை வழங்கி ரன்களைக் குவித்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அபிஷேக் 10 ரன்களிலும், ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து ஹரி நிஷாந்துடன் ஜோடி சேர்ந்த சன்னி சந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹரி நிஷாந்த் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 83 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சுஜய் சிவசங்கரன் 4 ரன்களுக்கும், கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் ரன்கள் ஏதுமின்றியும், வசீம் அஹ்மத் 16 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்க, மறுபக்கம் முகிலேஷ், சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து ஜெகதீசனுடன் இணைந்த ராஜ்குமாரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ராஜ்குமார் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 59 ரன்களிலும், ஜெகதீசன் கௌசிக் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களிலும் என் விக்கெட்டை இழக்க, திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது. சேலம் அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Also Read: LIVE Cricket Score

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை