டிஎன்பிஎல் 2025: ஷிவம் சிங் அதிரடியில் கோவை கிங்ஸை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸை எதிர்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது பலப்பரீட்சை நடத்தியது. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு விஷால் வைத்யா மற்றும் லோகேஷ்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷால் வைத்யா 6 ரன்களுக்கும், லோகேஷ்வர் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பாலசுப்பிரமணியம் சச்சின் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் அரைசதம் கடந்திருந்த சச்சின் பேபியும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஷாரூக் கான் 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பெரியசாமி அகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீராராக களமிறங்கிய அஸ்வின் 15 ரன்களை சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஷிவம் சிங் ஒரு முனையில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். மறுபக்கம் களமிறங்கிய விமல் குமார் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களிலும், ஹன்னி சைனி 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் சிங் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 82 ரன்களையும், பாபா இந்திரஜித் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு டிஎன்பிஎல் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றியில் பங்காற்றிய ஷிவம் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.