இது எங்களுக்கு மிகவும் தேவையான வெற்றி - ராஜத் பட்டிதார்!
ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 70 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வேல் - வைபவ் சூர்யவன்ஷி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், சூர்யவன்ஷி 16 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரியான் பராக் 22 ரன்களுக்கும், நிதீஷ் ரானா 28 ரன்களுக்கும் துருவ் ஜூரெல் 47 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து பேசியுள்ள ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “இது எங்களுக்கு மிகவும் தேவையான வெற்றி. இன்றைய போட்டிக்கான விக்கெட் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் 10ஆவது ஓவருக்குப் பிறகு அனைத்து பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையேச் சாரும். அவர்கள் காட்டிய துணிச்சல் அபாரமானது. இந்த போட்டியின் தொடக்கத்தில் அவர்கள் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Also Read: LIVE Cricket Score
ஒருகட்டத்தில் நாங்கள் விக்கெட்டுகளைத் தேடிக்கொண்டிருந்தோம், ஏனெனில் விக்கெட்டுகள் கிடைக்கும்போது தான் ரன்களை நிறுத்த முடியும். நான் எப்போதும் என் உள்ளுணர்வை முதலில் ஆதரிக்கிறேன், ஆனால் எங்களிடம் சிறந்த தலைவர்கள் குழு உள்ளது, அவர்களின் உள்ளீடுகள் எனக்கு நிறைய உதவுகின்றன. இறுதியாக சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் எங்களின் முதல் வெற்றியைப் பெற்றுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.